யாரடிமை இந்த நாட்டில்….,
விலங்கிட்டு, வேலியிட்டு,
பூட்டி வைத்த பூட்டை உடைத்தெறிந்து,
தடைகள் அனைத்தும் தகர்த்தெறிந்து,
உறுதியோடு தலைநிமிர்ந்து,
தாயகம் காக்க தழைத்தெழுந்த,
தங்கத்தாரகைகள், எம்நாட்டின் பெண்கள்.
அடிமைத்தனம் அழித்து ஆளவந்த பூமியில், ஆண்களுக்கு நிகர் நாங்களும் உள்ளோம் என உரக்கச் சொன்னவர்கள், எம் முன்னோர்கள்.
பாரதி கண்ட புதுமைப் பெண்களாய், எம் நாட்டில் விழித்தெழுந்தது 1956க்குப் பின்பு,
நாட்டில் எந்தத் துறையில் இல்லை எம் பெண்கள்.
காலம் கடந்து, கண்ணீர் துடைத்து, கலங்கரை விளக்காய் நம் வாழ்வின் உதாரணமாய் நின்றவர்கள் பலர்.
முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு, வீரமங்கை வேலு நாச்சியார் இன்னும், இன்னும் பலர் உள்ளனர்.
அன்று முதல் இன்று வரை அன்பிற்கு இலக்கணமான அம்மா என்று மட்டும் இல்லாமல், அனைத்து துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர்கள் பெண்கள்.
அரசியலா, அறிவியலா, ஆராய்ச்சியா அனைத்து துறைகளிலும் தடம் பதித்து, தங்களது தனித்துவத்தால், சரித்திரத்தில் இடம் பிடித்தவர்கள் எம் சாதனைப் பெண்கள்.
இப்பெண்கள் கூட்டம் ஒன்றாய் திரண்டு, அகில உலகையும் அன்பு மயமாக மாற்றும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
விஜி
No comments:
Post a Comment